பஞ்சபாத்திரம் மற்றும் (உ) ருத்தரணி
பஞ்ச என்றால் ஐந்து என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்சபாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள்.
சிலர் நினைப்பது போல் ஐந்து பாத்திரங்களோ அல்லது ஐந்து விதமான உலோகங்களின் கலவையோ அல்ல.
அதேபோல், அதனுடன் இணையாக இருக்கும் சின்னஞ்சிறு கரண்டிக்கு ‘ருத்ரணி’ என்று பெயர்.
சிலர் இதனை உத்தரணி என்பர், அது தவறு. ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால், அதற்கு ருத்ரணி என்று பெயர்.
பாற்கடலைப் பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்து அமிர்தத்தை எடுத்தது போன்று, பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும் போது, அது அமிர்தமாக வேண்டும் என்பதால் பாம்பின் உருவில் அதனை வடிவமைத்திருக்கிறார்கள். இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும்போது, முதலில் அந்தக் கடவுளின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள்.
இங்கே உதாரணத்திற்கு, விநாயகப் பெருமான் வழிபாடு செய்வதை எடுத்துக் கொள்வோம்.
‘விநாயகாய நமஹ: த்யாயாமி’ (விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்), ‘ஆவாஹயாமி’ (ஆவாஹனம் செய்கிறேன்), ‘ஆஸனம் சமர்ப்பயாமி’ (உட்காருவதற்கு ஆசனம் அளிக்கிறேன்) என்று சொல்லி அழைப்பார்கள்.
விநாயகப் பெருமான் வந்து ஆசனத்தில் அமர்ந்துவிட்டதாக எண்ணி அடுத்து, பஞ்ச உபசாரம் என்ற பூஜைகளைச் செய்வார்கள். அதாவது ஒரு விருந்தினர் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களை ‘வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்று, ‘உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள்,’ என்று முதலில் உபசாரம் செய்வது போன்று, இறைவன் நம் வீட்டிற்குள் வந்தவுடன் அவருக்குப் பாதபூஜை செய்யும் விதமாக,
‘பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி’ (உம்முடைய பாதத்தில் தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்கிகிறேன்),
‘ஹஸ்தயோ: அர்க்யம் சமர்ப்பயாமி’ (கைகளைச் சுத்தம் செய்து கொள்ளத் தண்ணீர் தருகிறேன்),
‘முகே ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (முகம் வாய் சுத்தம் செய்யத் தண்ணீர் தருகிறேன்),
‘சுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி’ (நீராடச் சுத்தமான தண்ணீரைத் தருகிறேன்),
‘ஸ்நான அனந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி’ (இறுதியாக மீண்டும் தண்ணீர் தருகிறேன்)
என்று ஐந்து முறை ருத்ரணியினால் தீர்த்தம் விடுவார்கள்.
இந்த ஐந்து விதமான வேலைகளைச் செய்வதற்குத் துணையாக இந்தப் பாத்திரம் பயன்படுவதால் ஐந்து என்ற அர்த்தத்தோடு இதனை பஞ்சபாத்திரம் என்று அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment